கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் வரி யுத்தம்: 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி...!
Trumps tariff war over Greenland issue 10 tariff on 8 European countries
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், கிரீன்லாந்தை தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால், அந்த தீவை ரஷியா அல்லது சீனா கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும், இது உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

இதுதொடர்பாக டென்மார்க் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கைகளையும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியது ஐரோப்பிய நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.டிரம்பின் இந்த கருத்துகளுக்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
இதற்குப் பதிலடியாக, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் பொருளாதார எச்சரிக்கையும் விடுத்தார்.அதன்படி, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, சுவீடன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 8 ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரீன்லாந்தை முழுமையாக வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவுடன் எட்டப்படாவிட்டால், ஜூன் 1-ம் தேதி முதல் இந்த வரி விகிதம் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.இது தொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், “பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எந்த வரியும் வசூலிக்காமல் உதவிகளை வழங்கி வந்துள்ளது.
இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கடுமையாக விமர்சித்தார்.மேலும், “உலக அமைதி தற்போது ஆபத்தில் உள்ளது. சீனா மற்றும் ரஷியா கிரீன்லாந்தை விரும்புகின்றன. அந்த அபாயத்தை தடுக்க டென்மார்க்கால் தனியாக எதுவும் செய்ய முடியாது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இந்த புனிதமான நிலப்பகுதியை யாராலும் தொட முடியாது” என்றும் அவர் தெரிவித்தார். உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த சூழ்நிலைக்கு உடனடியாகவும் உறுதியான முடிவுகளும் தேவை என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
இதனிடையே, கிரீன்லாந்து மீது அமெரிக்கா கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக கவனம் செலுத்தி வருவதாகவும், டென்மார்க் அல்லது சம்பந்தப்பட்ட எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். அதேசமயம், இந்த நாடுகள் “அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்தில் செயல்படுகின்றன” என குற்றம்சாட்டி, அவை ஆபத்தான அரசியல் விளையாட்டை விளையாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புகளுக்கு எதிராக கிரீன்லாந்தில் பெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று, தேசிய கொடியை ஏந்தியபடி, “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்ற முழக்கங்களை எழுப்பி, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
English Summary
Trumps tariff war over Greenland issue 10 tariff on 8 European countries