பொய் செய்திகளை பரப்புகின்றன ஊடகங்கள்.. டிரம்ப் கோபம்!
The media spreads fake news Trump is angry
ஈரானின் அணு உலைகள் முற்றிலும் அழிந்து விட்டன. சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளார்.
கடந்த 13-ந்தேதி ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. கத்தார் நாட்டிலுள்ள அமெரிக்க தளம் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றுள்ளது என கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். அமெரிக்க விமானங்கள் வெற்றியுடன் தாக்குதலை நடத்தி முடித்து, திரும்பி விட்டன என்றார்.
ஆனால், அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன என்றும் செறிவூட்டப்பட்ட யுரேனிய பொருட்கள் முன்பே பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் நடந்த ராணுவ தாக்குதல் வெற்றி என டிரம்ப் கூறி வந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணு உலைகள் அழியவில்லை. அவை பாதுகாப்பாக உள்ளன என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், டிரம்ப் ஆத்திரமடைந்துள்ளார். இது பொய்யான செய்தி என கூறியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து முயற்சித்து உள்ளன.
ஈரானின் அணு உலைகள் முற்றிலும் அழிந்து விட்டன. சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளார்.
English Summary
The media spreads fake news Trump is angry