இமெல்டா புயல் கோர தாண்டவம்..! மக்களின் பரிதாப நிலை..!
cyclone in america heavy flood
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், இமெல்டா புயல் வீசி வருவதால், அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. டெக்சாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹூஸ்டன் நகரை கடந்த 3 தினங்களாக இமெல்டா புயல் மிரட்டி வருகிறது.
இடைவிடாது பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவு பாதித்துள்ளது.
சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கிய கார்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மக்களை மீட்பு குழுவினர் படகுகள் மூலம் மீட்டு கரை சேர்த்தனர்.
தொடர் மழைக்காரணமாக ஹூஸ்டன் நகரில் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
ரைஸ்லாந்து என்னும் மருத்துவமனையை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து, அங்கிருந்து நோயாளிகள் பிற மருத்துவமனைகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹூஸ்டன் நகரின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வந்த ஒருவர், தனது குதிரையை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பான இடத்து அழைத்து செல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அந்நகரில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிசக்தி ஆலை மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், இதே ஹூஸ்டன் நகரில் புயல் தாக்கி 60க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெறவுள்ள ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 50,000 அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் உரையாற்ற உள்ளார்.
தற்போது அந்நகரை புயல் தாக்கியுள்ளதால், நிகழ்ச்சி தடையின்றி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
English Summary
cyclone in america heavy flood