இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட நேபாள பிரதமர் பதவிக்கு ஆபத்து! பதவியை காப்பாற்ற களமிறங்கிய சீனா!
China involved in Nepal local politics move
அண்மைக்காலமாக இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வந்த நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை பதவி நீக்கம் செய்வதற்கான வேலைகள் அந்நாட்டு ஆளுங்கட்சியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பதவி நீக்கம் செய்வதை தடுப்பதற்காக அவரது கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் சீன தூதர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தொடர்ந்து இந்திய எதிர்ப்பு, சீனா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். இது அங்கு சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடம் வெளியிடுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். இதனால் இந்தியா அதிருப்தியடைந்தது.
இதனிடையே கே.பி.சர்மா ஒலி தன் ஆட்சியைக் கவிழ்க்க இந்தியாவுடன் சேர்ந்து சதி நடப்பதாகவும் வெளிப்படையாகவே பேசினார். இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்யப் போவதாக எழுந்த செய்திகளை அடுத்து நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாலா நாத் கனால், மாதவ் குமார் நேப்பாள், உள்ளிட்டோரை சீன தூதர் ஹோ யாங்கி சந்தித்துள்ளார்.
அப்போது, ஒலிக்கு எதிராகச் செயல்பட வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. நேபாள் குடியரசுக் கட்சித் தலைவர் பித்யா தேவி பண்டாரியையும் அவர் சந்தித்தார்.
ஆனால் சர்மா ஒலியை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முயற்சியெடுத்து வரும் முன்னாள் பிரதமர் பிரசன்டா சீனத் தூதரை சந்திப்பதை தவிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ஒலியைக் காப்பாற்ற சீனா, நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
English Summary
China involved in Nepal local politics move