மூடப்படுகிறதா பி.எஸ்.என்.எல் நிறுவனம்.!! தலைமை மேலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!
Bsnl may close
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவையை அளித்து வரும் எனவும், மிகச்சிறந்த தொலைத் தொடர்பு சேவைகளை வெளிப்படையான மற்றும் மிகக்குறைவான கட்டணங்களில் அளித்துவரும் எனவும் பொதுமக்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கிறோம். இதுகுறித்து வெளியாகும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை என பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொடர்பு வட்டம் தலைமை பொதுமேலாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறித்து சில தவறான செய்திகள் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு ஒரு சில ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஆகவே பொதுமக்களின் மத்தியில் எழக்கூடிய ஐயங்களை போக்கும் வகையில் விளக்கங்களை வெளியிடுவது அவசியமாகி உள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவதற்கான எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. கடுமையான போட்டியின் விளைவாக ஏற்பட்ட கட்டண சரிவின் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒரு நிதி நெருக்கடியை கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகிறது. இந்த நிதி நெருக்கடியில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்தை மத்திய அரசு தயாரித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அளித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். முழுவதுமாக மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீவிரவாதத்துக்கு உள்ளான பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் தொலைதொடர்பு சேவைகளை அளிப்பது மட்டும் அல்லாமல் இந்திய ராணுவத்துக்கு தொலைத்தொடர்பு சேவைகளை அளித்து வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் நம் நாட்டிற்கு அத்தியாவசியமான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகிறது என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்களின்போது தொடர்ந்து தொலைத் தொடர்பு சேவைகளை பொதுமக்களுக்கு அளிக்கும் ஒரே நிறுவனமாக பி.எஸ்.என்.எல். விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவையை அளித்து வரும் எனவும், மிகச்சிறந்த தொலைத் தொடர்பு சேவைகளை வெளிப்படையான மற்றும் மிகக்குறைவான கட்டணங்களில் அளித்துவரும் எனவும் பொதுமக்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கிறோம். இதுகுறித்து வெளியாகும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்." என அதில் தெரிவித்துள்ளார்.
Tamil online news
Today News in Tamil