கூடலூர் அருகே பரிதாபம்.! காட்டு யானை தாக்கி வாலிபர் பலி.!
Youngman killed in elephant attack in Gudalur
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சீபோர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(38). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமல் என்பவருடன் நேற்று மாலை தனியார் காபி தோட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று, இவர்கள் இரண்டு பேரையும் விரட்டியது.
இதையடுத்து யானை பிடியில் சிக்கிய இரண்டு பேரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் யானையை விரட்டியடித்தனர். ஆனால் காட்டு யானை தாக்கியதில் நவ்ஷாத் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் ஜமால் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் உயிரிழந்த நவ்ஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
ஆனால் அப்பகுதியில் இருந்த கிராம மக்கள், காட்டு யானையை பிடிக்க கோரிக்கை விடுத்து உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கடந்த வாரம் காட்டு யானை தாக்கி சிவனாண்டி என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Youngman killed in elephant attack in Gudalur