டெல்டாவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க டிடிவி கோரிக்கை.!
TTV Dhinakaran Request to TN Govt about Delta Farmers work Damaged Rain 12 Jan 2021
தொடர் மழையால் காவிரி டெல்டாவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பருவம் தவறி பெய்துவரும் மழையால் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
கொரோனா பேரிடர் நேரத்திலும் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தி சேத மதிப்பைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழை நீர் வடிகால்களை முறைப்படுத்தி வயல்களில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். இதனைத் தாமதப்படுத்தினால் மழையால் சாய்ந்து கிடக்கும் பயிர்கள் மொத்தமாக அழுகிப்போய்விடும்.
எனவே, முன்னுரிமை அடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதியை ஒதுக்குவதுடன், மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று நிதி பெறுவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
TTV Dhinakaran Request to TN Govt about Delta Farmers work Damaged Rain 12 Jan 2021