ஒரேயொரு போஸ்டர்.. புதுமாப்பிள்ளை நட்பூக்களுடன் கைது.. வசனம் பேசி வாங்கிக்கட்டிய இளைஞர்கள்.!
Thoothukudi Festival Poster Against Police Officers
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் ஹைகோர்ட் மகாராஜா. இவர் காவல்துறையில் பணியாற்றுவதற்கு தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில், இவருக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இவரது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு, மணமகன் மற்றும் மணமகள் படத்துடன் தங்களது சமுதாயத்தின் பெயரையும் குறிப்பிட்ட அவரது நண்பர்கள், காவல்துறையை இழிவுபடுத்தி போஸ்டர் அடித்துள்ளனர்.
மேலும், அந்த போஸ்டரில், " காவல்துறை காட்டும் இடத்தில் மேயும் ஆடு நாங்கள் இல்லை.. காக்கி சட்டையை பதறவைக்கும் வான்புலி வகையறா " என்ற வசனத்துடன் போஸ்டர் அடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டர் அப்பகுதியில் பெரும் வைரலாகி வந்த நிலையில், இதனை கண்ட காவல் துறையினர் கடந்த 15 ஆம் தேதி புது மாப்பிள்ளையான ஹைகோர்ட் மகாராஜா உட்பட அவரது நண்பர்களையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
போஸ்டர் வசனகர்த்தாக்களான கொம்பையா, சுரேஷ், சக்தி, சுப்பிரமணி, ஆனந்தம், சரவணன் ஆகிய ஆறு பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், போஸ்டர் அடித்த 7 பேரும் தோட்ட ராஜன் என்பவருடன் சேர்ந்து செல்லப்பாண்டி என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்து, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பான புகார் பொய்யான புகார் என்றும், காவல்துறையினர் இழிவுபடுத்தி பேனர் வைத்ததால் எங்களது பிள்ளைகள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விட்டதாகவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை சந்தித்து அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi Festival Poster Against Police Officers