மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு எப்படி ஆசிரியரை நியமிக்க உத்தரவிட முடியும்..? பயோகெமிஸ்ட்ரி பட்டதாரியின் வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..!
The High Court has ruled that it cannot order the appointment of a teacher for a subject where there are no students
கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 09-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறித்த அறிவிப்பின்படி, பயோ கெமிஸ்ட்ரி பாட ஆசிரியர் பணிக்கு இந்திரா என்பவர் விண்ணப்பித்தார். அவர் அந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சியும் பெற்றார்.
ஆனால், 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி வெளியான இறுதி அறிவிப்பாணையில் பயோ கெமிஸ்ட்ரி பாடம் ஆசிரியர் பதவி இடம்பெறவில்லை. இதையடுத்து இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரியும், தனக்கு பயோ கெமிஸ்ட்ரி பாட ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் குறித்த நபர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து இந்திரா மேல்முறையீடு செய்தார். அதன்படி, மேல்முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், "தேர்வுக்கான அறிவிப்பில், காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 02 பயோகெமிஸ்ட்ரி ஆசிரியர் பணியிடம் முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த படிப்பில் மாணவர்களே இல்லாததால், 02 பணியையும் பட்டியலில் இருந்து நீக்கி பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அரசு தரப்பு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன், "மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்கினால், அவர் பாடம் நடத்த மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும், வெறும் மேஜைகளுக்கு அவரால் பாடம் நடத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மாணவர்களே இல்லாத பாடத்துக்கு ஆசிரியராக பணியமர்த்த முடியாது. அதனால் தனி நீதிபதி உத்தரவு சரியானது என்றும், இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
English Summary
The High Court has ruled that it cannot order the appointment of a teacher for a subject where there are no students