தமிழரின் சிற்ப கலைக்கு மேலும் ஒரு மணிமகுடம்! சிற்பக்கலையில் தேசிய அளவில் முதல் பரிசை வென்ற தமிழன்!
TamilNadu Sculptor Sirpi Siva won the first prize at national level in sculpture
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிற்பக் கலைப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் 'சிற்பி சிவா' என்ற சிவக்குமார் உருவாக்கிய 'சிவன் - பார்வதி - லிங்கம்' சிற்பத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் அம்பாஜி நகரத்தில் 'ஷில்போத்சவ்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டாவது சிற்பக்கலைப் போட்டி நடைபெற்றது.
இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், குஜராத், பஞ்சாப், ஹரியானா, தில்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18 சிற்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பாக பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றிகளை குவித்திருந்த, சிற்பக் கலைஞர் 'சிற்பி சிவா' என்ற சிவக்குமார் கலந்து கொண்டார்.
போட்டியாளர்கள் சிற்பங்களைப் படைக்க மொத்தம் 20 நாட்கள் (ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 8 வரை) அவகாசம் வழங்கப்பட்டது.
நம் தமிழக சிற்பக் கலைஞர் 'சிற்பி சிவா' 15 நாட்களில் மிக அற்புதமாக, தனித்துவமாக உருவாக்கிய சிவன் - பார்வதி - லிங்கம் சிற்பத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் குஜராத் மாநில கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜக்தீஷ் பாஞ்சல், சிற்பி சிவாவுக்கு முதல் பரிசையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாஞ்சல், ’’சிவாவின் சிற்பக் கலைத் திறன் வியக்க வைக்கிறது. சிவன் - பார்வதி - லிங்கம் சிற்பம் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் உள்ளது.
குஜராத் அரசின் சார்பில் நடத்தப்படவுள்ள மூன்றாவது சிற்பக் கலைப் போட்டிக்கும் அவரை அழைப்போம். குஜராத் மாநில சிற்பக் கலை வளர்ச்சிக்கு அவரது சேவையை பயன்படுத்திக் கொள்வோம்” என்று பாராட்டி பேசினார்.
English Summary
TamilNadu Sculptor Sirpi Siva won the first prize at national level in sculpture