இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது தொடர்பாக, தமிழக முதல்வர் விளக்கம் - முழு விபரம்.!
Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet After Meeting Narendra Modi Delhi
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதிஉதவி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காவேரி - கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காரணமாக விவசாயிகளுக்கு நிதி வழங்க உதவி கேட்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தமிழகத்தில் இராணுவ தளவாட நிலையம் சென்னை, சேலம், ஓசூர், திருசியில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதனை செயல்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து 40 தமிழர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் படகுகள் திரும்ப பெறுவதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன உதவிகள் மற்றும் மேம்பாடுகள் தேவைப்படுகிறது என்பதை விளக்கமாக தெரிவித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
அம்மாவின் தலைமையிலான அரசு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி வருகிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி பள்ளிகள், கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகள் ஒரே வருடத்தில் திறந்து அதிமுக தலைமையிலான தமிழக அரசு சாதனை செய்துள்ளது.
6 சட்டக்கல்லூரி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முன்னுரிமை வழங்கி, தமிழக அரசு இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ துறையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைத்துள்ளது. இதனை மத்திய அரசும் பாராட்டியுள்ளது. மாவட்டம் மாவட்டமாக சென்று அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலமாக இருந்து வந்தது.
குடிமராமத்து திட்டத்தை மேம்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த நீர் மேலாண்மை மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளின் வெற்றிக்கான அடையாளமாக தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பியுள்ளது. நிவர் மற்றும் புரவி புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதற்கான நிவாரண உதவியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்காக 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, மருத்துவ கனவை ஏழை, எளிய மாணவர்களுக்கு நனவாக்கியுள்ளேன்.
மருத்துவ மாணவர்களுக்கான கல்வி செலவுகளையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சாலை விபத்துகளை தமிழகம் குறைத்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்ததை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதிஉதவி கோரப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet After Meeting Narendra Modi Delhi