சிறப்பு!முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்...! சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் மு.க ஸ்டாலின்...!
Special Muthamizharignar Kalaignar Centenary Seminar MK Stalin to inaugurate it tomorrow in Chennai
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தவர்.இவர் தனது 20 வயது முதல் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்துள்ளார்.இவரது 80 ஆண்டுகாலம் பொது வாழ்வு, 5 முறை முதலமைச்சராக ஆட்சிபுரிந்தது மட்டுமல்லாமல், 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்களையும், 15 புதினங்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.

மேலும், "நண்பனுக்கு", "உடன் பிறப்பே" எனும் தலைப்புகளில் 7000 க்கும் மேற்பட்ட கடிதங்களும் "கரிகாலன்" என்னும் பெயரில் கேள்வி பதிலும் எழுதி இருக்கிறார்.இதைத் தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் இருக்கும்.
இவரது பள்ளிப் பருவம் தொடங்கி அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் பாராட்டுக்குரியவை. கவித்துவமும் இலக்கியத் திறனும் கொண்ட கருணாநிதியின் படைப்பாற்றலைப் போற்றும் வண்ணம் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்த முதன்முறையாக "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்", நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடத்தவுள்ளது.
இந்த தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்துகிறார்.இவ்விழாவில், சாகித்திய அகாடமி செயலர் முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ், வரவேற்புரையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கம் 3-ம் தளத்தில் உள்ள சிற்றரங்கில் "கவிதை" என்கிற அமர்வு நடைபெறுகிறது.இதேபோன்று, 28-ந்தேதி (சனிக்கிழமை) 2-ம் நாள் நிகழ்வில் "நாடகம்" என்கிற அமர்வு நடை பெறுகிறது. நிறைவு விழாவில், கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று பேச இருக்கிறார்.
English Summary
Special Muthamizharignar Kalaignar Centenary Seminar MK Stalin to inaugurate it tomorrow in Chennai