திடுக்கிடும் சம்பவம்...! சந்தேகத்தால் வந்த விபரீதம்...வங்கி பெண் ஊழியர் வெட்டிக்கொலை...! - 3 பேர் சிக்கினர்
Shocking incident tragedy caused by suspicion female bank employee hacked death3 people caught
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்த பெருமாளின் மகள் முத்துமாலை (35), ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். திருமணமாகி 7 வயது மகள் உள்ள நிலையில், முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அவர் பிரிந்திருந்தார். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் அந்த திருமண வாழ்க்கையிலும் சிக்கல்கள் உருவானதால், முத்துமாலை தனது மகளுடன் நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில், நாங்குநேரி பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞருடன் முத்துமாலை நெருங்கிய பழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது இந்த நடத்தை குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.குறிப்பாக, முத்துமாலையின் தம்பியான பன்னீர்செல்வம் (32), அந்த இளைஞருடனான தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு பலமுறை எச்சரித்து கண்டித்துள்ளார்.
இருப்பினும், குடும்பத்தினரின் அறிவுரையை பொருட்படுத்தாமல் முத்துமாலை தொடர்ந்து அந்த இளைஞருடன் பழகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், தனது அக்காவை கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக நாங்குநேரி ஆழ்வானேரியை சேர்ந்த தனது சித்தி மகன் இசக்கிப்பாண்டி (35) உடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.
திட்டமிட்டபடி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, பன்னீர்செல்வமும் அவரது நண்பரான வாகைகுளத்தை சேர்ந்த சிவா (28) என்பவரும் தியாகராஜநகரில் உள்ள முத்துமாலையின் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். நெல்லை மாநகர காவல் ஆணையர் சஞ்சய் தேஷ்முக் உத்தரவின் பேரில், துணை ஆணையர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
முதற்கட்டமாக, கொலை சதித்திட்டத்தில் ஈடுபட்ட இசக்கிப்பாண்டியை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோரையும் நேற்று சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
சொந்த அக்காவையே தம்பி நண்பருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking incident tragedy caused by suspicion female bank employee hacked death3 people caught