அதிக அளவு சத்து மாத்திரை உட்கொண்ட பள்ளி சிறுமி உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.!
School student death ear more Nutrition Tablets TN CM announce relief fund
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 249 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி பள்ளி குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
அப்போது 8ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் யார் அதிகமாக சத்து மாத்திரைகள் உட்கொள்வது என போட்டி போட்டு மாத்திரைகளை உட்கொண்டனர். இந்த போட்டியில் மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள் 4 பேரும் மயக்கம் அடைந்தனர்.
இதனை அடுத்து உடனடியாக மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
4 சிறுமிகளின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில், 3 மாணவிகளின் உடல்நிலை சீராகி வந்துள்ளது. ஆனால் சைஃபா பாத்திமா (வயது 13) என்ற ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் மோசமாகி கொண்டே சென்றதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டார்.
அதன் பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை மாணவியை அழைத்து சென்றபோது சேலம் அருகே மாணவிக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சேலத்தில் உள்ள குமாராப்பாளையம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து உதகையில் உள்ள உருது பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் முகமது அமீன் மற்றும் ஆசிரியர் கலைவாணி ஆகிய 2 பேரையும் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அதிக அளவு சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிகிச்சை பெற்று வரும் 3 மாணவிகளுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும், மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
School student death ear more Nutrition Tablets TN CM announce relief fund