இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம் - நடந்தது என்ன?
resolution filed on indian bank leader
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் திட்ட நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எவரையும் அழைக்காத இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்திருப்பதாவது:-
"கடந்த மாதம் 12-ந்தேதி இந்தியன் வங்கி சார்பில், ரூ.1,100 கோடி அளவிலான "பெண்களுக்கு அதிகாரமளித்தல்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் திட்டம்" எனும் நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை செயலாளர் எம்.நாகராஜ் பங்கேற்றார்.
ஆனால், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக நடைபெற்ற இந்த நிகழ்வு பற்றி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருடனும் கலந்தாலோசிக்கவில்லை. அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. மேலும், அப்பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்படவில்லை.
அரசின் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கப்படுவதும், அவர்கள் ஈடுபடுத்தப்படுவதும், அவர்களின் ஒருங்கிணைப்பு வாயிலாக மக்கள் தொடர்பு வலுப்படுத்தப்படுவதும் மக்கள் பிரதிநிதிகளின் சிறப்புரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்தியன் வங்கி இத்தகைய சிறப்பு உரிமையை அவமதித்துள்ளது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், ஜனநாயக மரபுகளையும் மீறியுள்ள செயல். இது மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கை அல்ல.
ஆகவே, இந்தியன் வங்கி தலைவரிடம் இத்தகைய உரிமை மீறலுக்கான விளக்கம் கோரப்பட வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகள் அரசுத் திட்ட அமலாக்கத்தில் கலந்தாலோசிக்கப்படுவதையும், ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் உரிமை மீறல் தீர்மானத்தை அளித்துள்ளோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
resolution filed on indian bank leader