வாலாஜாபேட்டை திமுக நிர்வாகி குறித்து வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகி! உண்மை என்ன?..!
Ranipet DMK Supporter AB Kumar Could Not Have 13 Case at Police station
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை திமுக நகர துணைச் செயலாளராக இருப்பவர் ஏ.பி குமார். இவர் சம்பவத்தன்று வாலாஜாபேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்டார செயல்முறை கிடங்குக்கு சென்று பணியாட்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்டார செயல்முறை கிடங்கில் ஒப்பந்ததாரராக உள்ள மணி என்பவர் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரின் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததன் காரணமாக காவல் துறையினர் அவரை தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது என தமிழகத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி இருந்தது. இதன் அடிப்படையில் நமது செய்திபுனல் சேனலிலும் செய்தியானது வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை கண்ட திமுக நகர துணைச் செயலாளர் ஏ.பி குமார் அவர்களின் வழக்கறிஞர் நம்மை தொடர்பு கொண்டு, வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். சம்பந்தப்பட்ட தனது மனுதாரர் ஏ.பி குமார் தலைமறைவாக இல்லை, அவருக்கு பிடி வாரண்டும் இல்லை, அவரின் மீது 13 வழக்குகள் இல்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வாலாஜாபேட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, நமது செய்திபுனல் நிறுவனம் சார்பில் விபரம் கேட்ட போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள திமுக நிர்வாகி ஏ.பி குமாரின் மீது 13 வழக்குகள் இல்லை என்பது குறித்து காவல் துறையினர் உறுதியான தகவல் தெரிவிக்கவில்லை. வழக்குகள் உள்ளது என்று மட்டுமே தெரிவித்தார்கள்.
காவல்துறையினர் தரப்பில் கூறிய தகவலானது, "அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இல்லை. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாகவே, கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு சென்று முன்ஜாமின் வாங்கிவிட்டார். தற்போது தினமும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று பிணைக்கான கையெழுத்தை இட்டு வருகிறார். அவரின் மீது வழக்குகள் உள்ளது" என்று தெரிவித்தனர்.
ஆகவே, அவரின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல அவர் தலைமறைவாகவும் இல்லை, தற்போது தினந்தோறும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டு செல்கிறார் என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
English Summary
Ranipet DMK Supporter AB Kumar Could Not Have 13 Case at Police station