சொத்து தகராறு விபரீதம்: அக்காவை குத்திய தம்பி பேருந்து மோதி பலி...! நடந்தது என்ன...?
Property dispute turns tragic Brother who stabbed his sister killed bus accident What happened
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் ராம்பிரபு (37). தலைவாசல் அருகே செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்தார். இவரது அக்கா முகந்தி, திருமணமாகி கணவருடன் வீரகனூரில் வசித்து வருகிறார்.
காமராஜ் தனது பூர்வீக சொத்துகளைப் பிரித்தபோது, மகள் முகந்திக்கு கூடுதலாக பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுதான் அக்கா–தம்பி உறவுக்குள் தீவிர சொத்து தகராறாக மாறியுள்ளது. இந்த விவகாரம் காரணமாக ராம்பிரபு நீண்ட நாட்களாக ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை வீரகனூர் சென்ற ராம்பிரபு, தனது அக்கா முகந்தியிடம் நேரடியாக தகராறு செய்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரத்தின் உச்சியில் சென்ற ராம்பிரபு, மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து, அக்காவின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த முகந்தியை உறவினர்கள் மீட்டு, ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த தகவல் முகந்தியின் உறவினர்களான சக்திவேல் (38), முத்துக்குமார் (43), கோபிநாத் (29) ஆகியோருக்கு தெரியவந்தது. அவர்கள் ராம்பிரபுவை செல்போனில் தொடர்பு கொண்டு, “ஏன் உன் அக்காவை கத்தியால் குத்தினாய்?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராம்பிரபு ஆபாசமாக திட்டியதுடன், “தைரியம் இருந்தால் நேரில் வா” என சவால் விடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கொதித்தெழுந்த அந்த மூவரும் காரில் ராம்பிரபுவை தேடி, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் சென்றனர். அங்கு மீண்டும் கடும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரத்தில் இருந்த ராம்பிரபு, கத்தியை எடுத்துக் கொண்டு கோபிநாத்தின் வயிற்றில் குத்தினார். இதை தடுக்க முயன்ற சக்திவேலுக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இருவரும் ரத்த வெள்ளத்தில் காயமடைந்து அலறினர்.அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க ராம்பிரபு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அச்சமயத்தில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து அவரை நேருக்கு நேர் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராம்பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த ஆத்தூர் டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராம்பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த கோபிநாத் மற்றும் சக்திவேல் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சொத்து தகராறில் தொடங்கிய குடும்ப சண்டை, அக்காவை குத்துதல், பின்னர் இரு உறவினர்களை குத்துதல், இறுதியில் அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Property dispute turns tragic Brother who stabbed his sister killed bus accident What happened