தனியார் வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது.. போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை!
Private vehicles should not carry school children Traffic Officer Alert
தனியார் வாகனங்களில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. அப்படி ஒப்பந்த அடிப்படையில் ஏற்றி செல்வதாக இருந்தால் "பள்ளி மாணவர்கள் உள்ளே" என்ற வாசகம் அந்த வாகனத்தில் எழுதப்பட வேண்டும் என்று ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதுவை நாதன் கூறினார்.
ஈரோடு கிழக்கு மேற்கு மற்றும் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பள்ளிகளின் 1075 வாகனங்கள் இன்று ஈரோடு ஏஐடி பள்ளி வளாகத்தில் ஆண்டு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா முதன்மை கல்வி அலுவலர் டிஎஸ்பிக்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட ஒரு குழு வாகனங்களை ஆய்வு செய்தது.
பின்னர் பதுவைநாதன் கூறியதாவது: சிலர் பள்ளி குழந்தைகளை பயணிகள் செல்லும் ஆட்டோகளில் மற்றும் மாருதி வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். மாருதி வானத்தை கொண்டு செல்லும்போது அதிலும் பள்ளி குழந்தைகள் உள்ளே என்று எழுதப்பட வேண்டும். அதற்கான அனுமதி பெற வேண்டும். ஆட்டோக்களில் குழந்தைகள் அதிகம் ஏற்று செல்லக்கூடாது. ஒரு ஆட்டோவில் சாதாரணமாக பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை போல் 1.5 சதவீதம் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். பள்ளி வாகனங்களில் பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது. அவ்வாறு இருந்தால் அதை பறிமுதல் செய்வோம். பள்ளி வாகனங்கள் ஓட்டும் டிரைவர்களுக்கு வயது நிர்ணயம் செய்யப்படவில்லை.
இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களது ஓட்டுநர் உரிமத்தை பரிசோதிக்க வேண்டும். டிரைவர்கள் லாக் புக்கில் எழுதும் வண்டி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்க்க வேண்டும். பள்ளி நிர்வாகம் குழந்தைகளிடம் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் வண்டியில் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை தனிப்பட்ட முறையில் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வண்டிகளில் ஜிபிஆர்எஸ், சிசிடிவி கருவிகள் முன்பும் பின்பும் தீதடுப்பான் கருவி, முதலுதவி கருவி போன்றவவைகள் அமைக்கப்பட வேண்டும். எமர்ஜென்சி கேட் வேக கட்டுப்பாட்டு கருவி சரியாக செயல்பட வேண்டும். பக்கத்தில் உள்ள ஜன்னல்கள் பக்கம் மூன்று அல்லது நான்கு கம்பிகள் ஐந்து சென்டிமீட்டர் இடைவெளியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாதவன் வாகன ஆய்வாளர் டாக்டர் ஏபி முத்துசாமி உடன் இருந்தனர்
English Summary
Private vehicles should not carry school children Traffic Officer Alert