அரசின் வேலையை கையிலெடுத்த இளைஞர்கள் - தமிழகத்துக்கே முன்மாதிரியான பெருந்துறை கிராமம் : கதி கலங்கும் அரசு நிர்வாகம்..!
perundurai ground water level
ஈரோட்டில் சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஈரோடு மட்டுமின்றி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களும், கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதற்காக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக போராட்டம், ஆட்சியரிடம் மனு என்று பல வழிகளில் மக்கள் போராடி பார்த்துவிட்டனர். ஆனால் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கிடம்பாளையம் புதூர் கிராமத்தில் குடிநீர் தொடர்பாக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் ஊரில் நிலத்தடி நீரின் தரம் சரியில்லை என்பதை உணர்ந்து, நீரை ஆய்வக பரிசோதனைக்கு அவர்களாகவே அனுப்பியுள்ளனர். அதில் கிடைத்த முடிவுகள் திடுக்கிட செய்துள்ளது.
சாதாரணமாக மனிதர்கள் குடிக்கும் நீரில், உப்பின் அளவு, 'டோட்டல் டிசால்வ்டு சால்ட்' எனும் டி.டி.எஸ் (TDS) அதிகபட்சமாக 600 வரை இருக்கலாம். ஆனால் இந்த கிராம நிலத்தடி நீரில் 1300 என்ற அளவில் இருந்துள்ளது.
சுத்தமான குடிநீரின் PH மதிப்பு 7 ஆக இருக்க வேண்டும். இங்கு 8.5 ஆக பதிவாகியுள்ளது. நீரின் கடினத்தன்மை அதிகபட்சமாக 180ppm வரை இருக்கலாம். அந்த ஊரில் 1250 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த புதூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், நிலத்தடி நீரை குடிக்க பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஈரோட்டில் குடிநீர் பருகுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற அதிர வைக்கும் தகவல் பரவி வரும் நிலையில், நிலத்தடி நீரும் மாடுபட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை இளைஞர்கள் முன்னெடுத்து செய்து, தமிழகத்தின் மற்ற கிராமங்களுக்கும் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளனர். இதே போல தமிழகத்தில் மற்ற கிராம மக்களும் தாமாகவே முன்வந்து முயற்சிக்கும் பட்சத்தில், மக்களுக்கு தரமான குடிநீரை வழங்கும் விவகாரத்தில் அரசு கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும்.
English Summary
perundurai ground water level