மாற்று இடம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!
People request the authorities to provide an alternative place..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ஆலடி சாலையில் நீரோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், விருத்தாசலம் - கடலூர் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியர் அலுவலகதிற்கு எதிர்புறம் உள்ள 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி பகுதி மற்றும் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள 1.25 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு தாங்கல் பகுதி என அனைத்து பகுதிகளையும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆக்கிரமிப்பு செய்து 150-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் என பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து விருத்தாசலத்தை சேர்ந்த தடயம் பாபு என்பவர் ஏரியையும், ஏரி பகுதியையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதைக் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த 2018, ஜனவரி 10 ஆம் தேதி முல்லா ஏரிப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றாதது குறித்து 2021 நவம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், சென்னை நீதிமன்றம் வரும் ஆகஸ்டு 29-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீஸ் அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றவில்லை.
இந்நிலையில் நேற்று(23.8.2022) ஏ.எஸ்.பி அங்கித் ஜெயின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்களின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கால அவகாசம் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கூறி ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
People request the authorities to provide an alternative place..!