ஆன்லைன் டிரேடிங் மூலம் பல லட்சரூபாய் மோசடி: 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!
Online trading scam of several lakhs Police arrest 2 people
அதிக வருமானம் கிடைக்கும் என நம்பி போலியான ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து ஒருவர் ஏமாற்றப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை சைபர் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சைபர் குற்றவாளிகள் மோசடி செய்வதில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பம், நுணுக்கங்களை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.அதன்படி தற்போது ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் அவர்கள் தற்போது ஈடுபட தொடங்கியுள்ளனர். போலீஸார் இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், Facebook பக்கத்தில் அறிமுகமான நபர் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார். அதற்குப்பின்னர், வாட்ஸ்அப் எண்கள் மூலமாக தொடர்ந்து வழிகாட்டல் வழங்கப்பட்டு, அதிக வருமானம் கிடைக்கும் என உறுதியளித்து ஆன்லைன் டிரேடிங் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்துள்ளனர். இவர்கள் கூறியதை நம்பி மொத்தமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அந்த நபர் முதலீடு செய்தார்.
இதையடுத்து இணையதளத்திலிருந்து முதலீட்டுத்தொகையை திரும்பப் பெற முயற்சித்தபோது, பணத்தை திரும்பபெற இயலவில்லை. இதனால் சந்தேகம் எழுந்து கேட்டபோது , சம்பந்தப்பட்ட நபர்கள் கூடுதல் பணம் கேட்டனர். பின்னர் தான் மோசடியானது உண்மையென்று புரிந்ததும், உரிய சட்ட நடவடிக்கையை National Cyber crime Reporting Portal புகார் பதிவு செய்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாயஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கைப்பற்றியதோடு, வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு, இது தொடர்பாக 2 பேரை சைபர் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆன்லைன் டிரேடிங் போன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார்.
English Summary
Online trading scam of several lakhs Police arrest 2 people