ஓட்டுனர் உரிமத்தில் புதிய சட்டம் கொண்டுவந்த மத்திய அரசு! வாகன ஓட்டிகளே உஷார்!
new act for driving licence renewal
சாலை விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. இதையடுத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தொகை இதற்கு முன் இருந்ததைவிட பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகளின் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.
இதையடுத்து, அபராத தொகையை அந்தந்த மாநிலங்கள் தங்கள் விருப்பத்து ஏற்ப செயல்படுத்தலாம் என மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்தார். திருத்தம் கொண்டுவரப்பட்ட இந்த சட்ட திருத்தம் இன்னும் தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.
திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஓட்டுனர் உரிமம் காலாவதியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே 100 ருபாய் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆகிவிட்டால் ஒரு ஆண்டுக்கு 50 ரூபாய் வீதம் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அபராதம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம் என இதற்கு முன் இருந்த சட்டத்தில் இருந்தது.
தற்போது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் 5 ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற காலஅவகாசத்தை ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆகியவுடன் ஒரு ஆண்டுக்குள் புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்குள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காவிட்டால் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதுபோல மீண்டும் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும்.
மேலும், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பது தொடர்பாக சட்ட திருத்தம் விரைவில் தமிழகம் முழுவதும் அமலுக்கு வர உள்ளது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அபராத தொகை அதிகப்படுத்துவதை தமிழகத்தில் அமல்படுத்துவதா, வேண்டாமா என தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.
ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பது குறித்த சட்ட திருத்தங்கள் தமிழகத்தில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என, இந்த புதிய சட்டம் இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
new act for driving licence renewal