நம் வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை அளிக்க வேண்டும் - மத்திய இணை அமைச்சர் பேச்சு..!
modi birthday and International Beach Cleanup Day celebration
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள பெசன்ட் நகர் ஆல்காட் மெமோரியல் பள்ளியில் இருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்ட பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், மத்திய இணை அமைச்சர் தெரிவித்ததாவது, "8 ஆயிரம் கி. மீ. பரந்து விரிந்துள்ள இந்திய கடற்கரையில் எண்ணற்ற வளங்கள் பொதிந்து கிடக்கின்றது. கடலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று நடந்து வருகிறது.
விளையாட்டை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேலோ இந்தியா, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளையாட்டு மைதானம் என்பதை எடுத்துக்காட்டாக கூறலாம்" என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மை இயக்கம் நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பேசுகையில், "கொரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதும், கடல்சார் பொருட்கள் உற்பத்தி அதிகமாகவே இருந்தது. இத்தகைய கடல் அன்னையை தாய் நாட்டை போன்று போற்றி பாதுகாக்க வேண்டும்.
நம் வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை அளிக்க வேண்டும். எனவே கடலை, கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 100வது சுதந்திர தினத்தில் இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த தூய்மை பணியில் ஈடுபட்டார்.
English Summary
modi birthday and International Beach Cleanup Day celebration