எதிர்கட்சித் தலைவர் தயாரா? அப்போ நாங்களும் தயார் - அமைச்சர் சிவசங்கர் அதிரடி.!
minister siva sangar press meet about eps speech
நேற்று தமிழக சட்டசபை கூட்டம் நிறைவடைந்த பிறகு, தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 'தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை' என்று அவர் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், "சமீபத்தில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார். ஏற்கனவே உள்ள 99 புதிய பேருந்துகளுடன் இப்போது 199 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 4 ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் அவை வாங்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு நிதியில் இரண்டு ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான பணியும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் 2 ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதைதவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் புதிய பேருந்துகள் வாங்க முடியாத நிலை இருந்தது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பதினைந்து ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் 10 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டன. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் வெறும் 3 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன.
ஆசியாவிலேயே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வருவதற்கு தயாராக இருந்தால் நானும், அமைச்சர் சேகர்பாபுவும், அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதை அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம்.
முந்நூறுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் இயக்கப்படுகின்றன. தற்போது வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
minister siva sangar press meet about eps speech