சூடான ரத்தத்தின் கதைய சீக்கிரமா கேளுங்கள்.! இயக்குனர் மாரி செல்வராஜ் ட்விட்.!!
Mari Selvaraj tweeted about school student attacked incident in Tirunelveli
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகன் சின்னதுரை, 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு சென்றவரிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர்.
அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாங்குநேரியிலுள்ள வீட்டில் சின்னதுரையும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைவாக வரவில்லை என கூறி பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களின் தாத்தா போராட்டத்தின் போது உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சாதி ரீதியில் பள்ளி மாணவன் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Mari Selvaraj tweeted about school student attacked incident in Tirunelveli