விழுப்புரம் || குடும்பத் தகராறில் மாமனாருக்கு குறி வைத்த மருமகன் - போலீசார் அதிரடி.!
man arrested for murder in vilupuram
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே வேளியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் கவுசல்யா சென்னையில் பணிபுரிந்து வந்த போது திருவண்ணாமலையை சேர்ந்த கேசவன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கேசவனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் மனைவி கவுசல்யாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கவுசல்யா, கடந்த 4 ஆண்டுகளாக அவருடைய சொந்த ஊரான வேளியந்தல் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இதையடுத்து பெங்களூருவில் பணிபுரிந்து வரும் கேசவன் அடிக்கடி மனைவி மற்றும் குழந்தைகளை வந்து பார்த்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் படி, நேற்று வழக்கம் போல் மனைவி, குழந்தைகளை பார்க்க வந்த கேசவன், மதுபோதையில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சில நிமிடத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கேசவன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் செல்வதாக தெரிவித்துள்ளார். அப்போது ஆறுமுகம், கேசவனை வழி மறித்து, குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கேசவன் அருகில் இருந்த கட்டையால் மாமனார் ஆறுமுகத்தை கடுமையாக தாக்கியதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கேசவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for murder in vilupuram