மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்.! நீயா?நானா?பார்த்துவிடுவோம்! வைகோ எடுத்த அதிரடி முடிவு!
Mallai Sathya removed from MDMK Is it you Or me Let see Vaiko drastic decision
மதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. பொதுச்செயலாளர் வைகோவுக்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்து, இறுதியில் மல்லை சத்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2019-ஆம் ஆண்டிலிருந்து வைகோவின் மகன் துரை வைகோ, கட்சியின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்று வருகிறார். இது, கட்சியில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை எழுப்பியது. குறிப்பாக, மல்லை சத்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள், துரை வைகோவின் நிர்வாக முடிவுகள் மற்றும் ஜாதி அடிப்படையிலான நியமனங்களை வெளிப்படையாக விமர்சித்தனர். இதனால் இரு தரப்பினரிடையேயான மோதல் மேலும் தீவிரமானது.
ஒரு கட்டத்தில், கோபமடைந்த துரை வைகோ, தனது பதவியை ராஜினாமா செய்ய முனைந்தார். ஆனால் வைகோவின் சமாதான முயற்சியில் அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். அதேசமயம், மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோவின் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு சத்யா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், வைகோ, மல்லை சத்யாவை விடுதலைப் புலிகளின் மாத்தையாவுடன் ஒப்பிட்டு, அவர் துரோகம் செய்ததாகக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லை சத்யா, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, “என் 32 ஆண்டு அரசியல் வாழ்க்கையை தலைமை அவமதித்துள்ளது. வைகோ தனது மகனுக்காக கட்சியை வாரிசுரிமை அரசியலுக்கு தள்ளி, என்னை துரோகியாக சித்தரிக்கிறார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர், இப்போது அதையே செய்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பரபரப்பை முடிவுக்கு கொண்டு வர வைகோ நேரடியாக தலையிட்டு, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Mallai Sathya removed from MDMK Is it you Or me Let see Vaiko drastic decision