ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் - அதிரடி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை..!
madurai highcourt order to District Principal Education Officer
மதுரை ஐகோர்ட்டில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கணவாய்பட்டி கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அங்கு கல்வி பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தி, அதனை அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க கூடாது என்று தெரிவித்து, மாணவர்களிடம் 10 ரூபாய் பணம் கொடுத்து வந்துள்ளார்.
மேலும், பள்ளிக்கு சரியாக வராமல் 12-ம் வகுப்பு முடித்த ஒரு பெண்ணை ரூ.3 ஆயிரத்துக்கு வேலைக்கு வைத்து, அவர்களையே பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வைக்கிறார். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. மேலும், சில பள்ளி மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கி மாற்று சான்றிதழ் கொடுத்தும் அனுப்பிவுள்ளார்.
எனவே பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் மற்றும் இவர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தலைமை ஆசிரியர் 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கி உள்ளார் என்று தெரிவித்தார்.
இதனை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், இது தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
madurai highcourt order to District Principal Education Officer