கோவில் பெயரில் நடத்தும் தனியார் இணையதளங்களை முடக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
madurai high court order to private internet run in temple name ban
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது,
"பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60-ம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த கோவிலை அணுகுவதற்காக பலர் தவறுதலாக தனியார் இணையதளங்களை தொடர்பு கொள்கின்றனர்.
இங்கு திருமணம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் தர்ப்பில் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் தனியார் இணையதளங்களில் நான்கு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற தனியார் இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில்,
"கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், மக்கள் உணர்வுகளை வியாபாரமாக அணுகக் கூடாது என்று குறிப்பிட்டு, இந்த வழக்கை வரும் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
English Summary
madurai high court order to private internet run in temple name ban