ஈரோடு || வேட்டையை தொடங்கிய சிறுத்தை! அச்சத்தில் கிராம மக்கள்!
leopard started hunt Villagers fear
வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை பசு மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது:
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரியபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி இந்த கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி வருவதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இதே கிராமத்தை சேர்ந்த மாதேவம்மா என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் மாடுகளை வளர்த்து, இரவு நேரத்தில் மாட்டுத்தொழுவத்தில் கட்டி வைப்பது வழக்கம் இருந்து வந்துள்ளது. வழக்கம் போல் மாடுகளை நேற்று இரவும் மாட்டுத்தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.
அப்போது சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி பசு மாட்டை அடித்து கொன்ற போது மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு மாதேவம்மா மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தனர்.
சிறுத்தை மாட்டை அடித்து கொன்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ''எங்களது கிராமம் வனப்பகுதியையொட்டி இருப்பதால் அதிக அளவில் கால்நடைகளை வளர்த்து வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி எங்கள் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
நேற்று இரவு கூட ஒரு பசு மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது. இதனால் எங்கள் ஊரை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை வனப்பகுதியையொட்டி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்'' என்றனர்.
English Summary
leopard started hunt Villagers fear