கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு! வியாபாரிகள் மகிழ்ச்சி!
kodaikanal tourist arrivals increase
திண்டுக்கல்: இயற்கை எழில் கொஞ்சும் அழகு, கண்ணைக் கவரும் மலை முகடுகள், தலையை முட்டும் மேகக் கூட்டங்கள் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும்.
இங்கு வருடம் முழுவதும் இதமான வானிலை நிலவுவதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால், சுற்றுலா பயணிகள் மிகவும் உற்சாகம் அடைவதால் நாளுக்கு நாள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
காற்றின் வேகம் அதிகரித்ததால் பாதுகாப்புக்காக படகு சவாரி நிறுத்தப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி, காற்றின் வேகத்தைப் பொறுத்து படகுகள் இயக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
kodaikanal tourist arrivals increase