வீடு தேடி வரும் கணக்கெடுப்பு! தமிழக அரசின் அரசாணை வெளியீடு...! - 33 கேள்விகள்.. 1.20 லட்சம் ஊழியர்கள்!
Home based survey Tamil Nadu government releases government order 33 questions 1point20 lakh employees
தமிழகத்தின் மக்கள்தொகை நிலவரத்தைத் துல்லியமாகக் கணிக்கும் 'டிஜிட்டல் கணக்கெடுப்பு' வரும் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக சுமார் 1.20 லட்சம் களப்பணியாளர்கள், 33 பிரத்யேகக் கேள்விகளுடன் வீடு வீடாகச் சென்று தரவுகளைச் சேகரிக்கத் தயாராகி வருகின்றனர்.

இந்தியாவில் வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் இந்த மெகாத் திட்டம், கடைசியாக 2011-ல் நடைபெற்றது. 2021-ல் நடைபெற வேண்டிய பணிகள் பெருந்தொற்று காரணமாக முடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதற்கான பச்சைக்கொடியைக் காட்டியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, சுமார் ₹11,718.24 கோடி மதிப்பீட்டில் 'மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய அளவில் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்பணியின் முதற்கட்டமானது, 2026 ஏப்ரலில் தொடங்கி செப்டம்பருக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 30 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஜூலை 17 முதல் 31 வரை பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவிட (Self-Enumeration) வசதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 முதல் 30 வரை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 1.20 லட்சம் பணியாளர்கள் நேரடியாகக் களமிறங்கி விவரங்களைச் சேகரிப்பார்கள்.
இந்த நவீனக் கணக்கெடுப்பில் குடியிருப்பின் தரம், அடிப்படை வசதிகள், மதம், கல்வி அறிவு, பொருளாதார நிலை மற்றும் இடப்பெயர்வு உள்ளிட்ட 33 முக்கியக் கேள்விகள் இடம்பெறுகின்றன.
இவற்றுடன், ஒட்டுமொத்தப் பணிகளையும் ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் சி.எம்.எம்.எஸ் (CMMS) என்ற பிரத்யேக இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் சுமையுடன் இப்பணியைச் செய்யும் ஊழியர்களுக்குத் தகுந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
English Summary
Home based survey Tamil Nadu government releases government order 33 questions 1point20 lakh employees