சொத்து வரி குறைத்து மதிப்பிட்டு ஊழல்: மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து கட்டடத்திலும் ஆய்வு :உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!
High Court branch order to inspect every building in Madurai Corporation
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான கட்டிடங்களில் சொத்துவரி குறைத்து மதிப்பிடப்பட்டு, கையூட்டு பெறப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புகாரில் சுமார் ரூ.200 கோடிக்கு முறைகேடு நடந்திருக்க கூடும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாநில காவல்துறை சார்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு இந்த மனு தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மதுரை மாநகராட்சி மேயர் இந்துராணியின் கணவர் சென்னையில், கைது செய்ப்பட்டதோடு, தூத்துக்குடியில் காவல் அதிகாரி ஒருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த முறைகேடு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றும், தற்போது ஆவணங்களை கைப்பற்றி அதுகுறித்து ஆய்வு நடத்திவருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும், மதுரை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிடுகையில், சொத்துவரி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி உரிய இழப்பீட்டை பெற்று வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் நீதிபதிகள் தொடர்ந்து கூறுகையில்; மதுரை மாநகராட்சியில் உள்ள கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது நேர்மையாக வரி செலுத்துபவர்களையும் இது பாதிக்கும். மேலும் இந்த சொத்து வரி முறைகேட்டால் அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரக்கூடிய வருமானம் குறையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதன் காரணமாக உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர் உள்ளிட்டவற்றை மேம்படுத்த முடியாது என்றும், எனவே, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் சொத்துவரி முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, மதுரை மாநகராட்சி ஆணையர் மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்ய பல்வேறு குழுக்களை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.அத்துடன், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
English Summary
High Court branch order to inspect every building in Madurai Corporation