10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஈரோடு மாநகராட்சி ஒரு புறக்கணிக்கப்பட்ட மாநகராட்சியாகவே இருந்தது - மா.சுப்பிரமணியன்.!
health minister m subramaniyan press meet in erode for election
வருகிற 27 ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- "வரலாற்றிலேயே ஈரோடு மாநகராட்சிக்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு.
தந்தை பெரியார் கடந்த 1917-ம் ஆண்டு ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இந்தத் தீர்மானத்தை கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி நிறைவேற்றினார். அதற்கு பின் வந்த ஆட்சியாளர்களால் இந்த மாநகராட்சிக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
தமிழகத்தில் தற்பொழுது மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்த மாநகராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டு வருவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் ஈரோடு மாவட்டத்திற்கு 22 மருத்துவமனைகள் முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதில் 13 மருத்துவமனைகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஈரோடு மாநகராட்சி ஒரு புறக்கணிக்கப்பட்ட மாநகராட்சியாகவே தொடர்ந்து இருந்தது.
தற்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சர் ஈரோடு மாநகராட்சிக்கு என்று ரூ.480 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரைக்கும் அமைச்சர்கள் தேர்தலுக்காக பணியாற்றினாலும் எந்த அலுவல் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கூட உருவாக்கவில்லை. இது குறித்து பேச எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று அவர் பேசியுள்ளார்.
English Summary
health minister m subramaniyan press meet in erode for election