தூய்மையான சென்னை: இனி இந்த வாகனங்களுக்கு ₹25,000 அபராதம் - மாநகராட்சி அதிரடி!
GCCs Strict Dust Norms 25000 Spot Fine for Construction Vehicles
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், "தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025"-ஐ பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) அதிரடியாக அமல்படுத்தியுள்ளது.
கட்டுமான வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள்:
கட்டுமானப் பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இனி பின்வரும் விதிமுறைகளை மிகக்கடுமையாகப் பின்பற்ற வேண்டும்:
தார்பாலின் போர்வை: வாகனத்தின் மேல்புறம் மட்டுமின்றி, நான்கு பக்கவாட்டுகளும் தார்பாலின் கொண்டு முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
சாலைத் தூய்மை: ஏற்றிச் செல்லும் பொருட்கள் அல்லது தூசிகள் எக்காரணம் கொண்டும் சாலையில் சிதறக் கூடாது.
சுமை அளவு: நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை (Overloading) ஏற்றுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை மற்றும் அபராதம்:
விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது:
விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.
விதிமீறலுக்காக அந்த இடத்திலேயே ₹25,000 அபராதம் விதிக்கப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.
சென்னை மாநகரைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க கட்டுமான நிறுவனங்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
GCCs Strict Dust Norms 25000 Spot Fine for Construction Vehicles