மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்: தங்கச்சிமடத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்: ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு..!
Fishermen protest against train blockade in Thangachimadam
கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனே விடுவிக்க கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என ராமேஸ்வரத்தில் மீனவ சங்கங்கள் முடிவு செய்தன.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடந்த 13-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், 15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து மத்திய அரசு மீனவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஏற்கனவே, அறிவித்தபடி இன்று தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் திட்டமிட்டனர்.
இதையடுத்து ராமநாதபுரத்தில் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று, ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமையில் நடைபெற்றது.

அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று பிற்பகல் 03 மணியளவில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது இலங்கை கடற்படையால் சிறைபிடித்த மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் ரயிலை மறித்ததால் ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தங்கச்சிமடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.இதன் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
English Summary
Fishermen protest against train blockade in Thangachimadam