துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 72 பதவிக்கு 02.49 லட்சம் பேர் நாளை தேர்வு; தேர்வாளர்களுக்கு டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ள எச்சரிக்கை..?
Exams for 72 posts including Deputy Collector and Police DSP tomorrow
குரூப் 01 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 72 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாளை நடைபெறவுள்ளது. 72 பதவிக்கு , 2.49 லட்சம் பேர் தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வு நடைபெறும் மையங்களுக்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

துணை ஆட்சியர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 07 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 07, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 03, தொழிலாளர் நல உதவி ஆணையர் 06 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கிறது. இவற்றுடன் உதவி வனப் பாதுகாவலர் 02 காலியிடங்களுக்கான குருப் 01-ஏ அறிவிப்பு கடந்த ஏப்ரல் 01-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. குறித்த தேர்வுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குரூப் 01, குரூப் 01-ஏ தேர்வுக்கு 02 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர்.
இதில் குரூப் 01 பதவிக்கு 2,27,982 பேரும், குரூப் 01ஏ தேர்வுக்கு 6465 பேரும், குரூப் 01, குரூப் 01-ஏ தேர்வுக்கு சேர்த்து 14849 பேரும் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குரூப் 01 முதல் நிலை தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 06 தாலுகா மையங்கள் என 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த தேர்வை கண்காணிக்க 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குரூப் 01 முதல்நிலை தேர்வை சென்னையில் மட்டும் 41,094 பேர் எழுதுகின்றனர். இதற்காக சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Exams for 72 posts including Deputy Collector and Police DSP tomorrow