ஃபோனில் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட்!
Driver suspended for speaking on phone while driving
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (58). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். ஃபோனில் பேசிக் கொண்டே பேருந்து இயக்கிய இவருடைய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இருந்து வாணியம்பாடி வரை செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநராக வேலை செய்து வரும் பிரதீப் குமார் சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்பூர் வரை செல்லும் பேருந்தை இயக்கிச் சென்றபோது, பாக்கெட்டில் இருந்து ஃபோனை எடுத்து, பேருந்தை ஒரு கையால் இயக்கியவாறு, யாரோ ஒருவரின் நம்பரை தேடி எடுத்து அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு, ஃபோனில் பேசியபடி பேருந்தை இயக்கியுள்ளார்.
பிளாஸ்டிக் கவரில் இருந்த உருளைக் கிழங்கு சிப்சுகளை சாப்பிட்டுக் கொண்டே ஃபோனில் அரட்டை அடித்துக்கொண்டு பயணிகளின் உயிரை பற்றி கடுகளவு கூட, கவலை இல்லாமல் பேருந்து ஓட்டிச் சென்றதை அதே பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பேருந்து ஓட்டும் போது ஓட்டுநர்களின் முழு கவனமும் வேலையில் இருக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை ஒவ்வொரு ஓட்டுநரும், நடத்துநரும் உறுதி செய்யும் வகையில் வேலை செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுரைகளை வழங்கினாலும், தங்களது கடமையை உணராத ஒரு சில ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களால் இது போன்ற அவப்பெயர் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
ஃபோன் பேசிய படி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பிரதீப் குமாரை சஸ்பெண்ட் செய்ய, வேலூர் அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டார். இதுகுறித்து ஓட்டுநர் பிரதீப்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
English Summary
Driver suspended for speaking on phone while driving