கடலூரை உலுக்கிய கொலை சம்பவம்... "10 பேருக்கு ஆயுள் தண்டனை".. கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
Cuddalore court gave life imprisonment to 10 people in AIADMK executive murder case
கடலூர் மாவட்டம் துறைமுகத்தில் இருந்து தினமும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மீனவர்களுக்கிடையே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 15.05.2018 அன்று இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே பயங்கர மோதலில் கத்தி, அரிவாள், சுளுக்கி போன்ற பயங்கர ஆயதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் சமாதானம் செய்ய முயன்ற சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் போதே ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனால் கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் மிதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பிரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துகுமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் தேவிகாபட்டினம் மற்றும் சோனாங்குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cuddalore court gave life imprisonment to 10 people in AIADMK executive murder case