மாநகராட்சிக்கு சொந்தமான 100 கடைகளுக்கு சீல் வைப்பு..மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
Corporation owned 100 shops Sealing in rayapuram
நேற்று ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான 100 கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட என்.எஸ்.சி. போஸ் ரோடு, நாராயணப்பா சாலை, மாலை அங்காடி சாலை போன்ற பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான 100 கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாடகை அடிப்படையில் பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கடைகளில், மாதத்திற்கு 443 ரூபாய், மாநகராட்சி சார்பில் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், வாடகை தாரர்கள் மாநகராட்சிக்கு ரூ.15 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
இது குறித்து, மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் கடைக்காரர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதனால், வருவாய் துறை அதிகாரிகள் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று ராயபுரம் உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் உரிமம் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் வாடகை பாக்கி வைத்துள்ள 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாடகை நிலுவைத் தொகையை முழுவதுமாக மாநகராட்சிக்கு செலுத்தும் பட்சத்தில் மீண்டும் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு கடைகள் திறப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Corporation owned 100 shops Sealing in rayapuram