சென்னையில் எல்பிஜி தட்டுப்பாடு: 2 கி.மீ நீளத்திற்கு ஆட்டோக்கள் வரிசை - தவிக்கும் ஓட்டுநர்கள்!
Chennais LPG Crisis Auto Drivers Stranded in 2km Queues Amid Fuel Shortage
சென்னை மாநகரின் போக்குவரத்துத் துடிப்பாக விளங்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்ஸிகள் தற்போது ஒரு மிகப்பெரிய எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. எல்பிஜி (LPG) மற்றும் சிஎன்ஜி (CNG) எரிவாயுவைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள திடீர் எரிவாயு தட்டுப்பாடு ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பலத்த அடிவாங்கியுள்ளது.
நீண்ட வரிசைகளும் ஓட்டுநர்களின் அவலமும்:
சென்னையின் முக்கியப் பகுதிகளான சைதாப்பேட்டை, கிண்டி மற்றும் சிஐடி நகர் ஆகிய இடங்களில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையங்களில் ஆட்டோக்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன. குறிப்பாக, சிஐடி நகரில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒருமுறை எரிவாயு நிரப்புவதற்கு ஓட்டுநர்கள் குறைந்தது 3 மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
"ஏற்கனவே கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், எரிவாயுவுக்காக இவ்வளவு நேரம் காத்திருப்பது எங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வடையச் செய்கிறது. ஓட்ட வேண்டிய நேரத்தில் வரிசையில் நிற்பதால் அன்றாட வருமானம் பாதிக்கப்படுகிறது" என ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எண்ணெய் நிறுவனங்களின் விளக்கம்:
இந்த நெருக்கடி குறித்து இந்திய ஆயில் (IOC) நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தங்களது கையிருப்பில் போதுமான அளவு எரிவாயு உள்ளதாகவும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலையங்களுக்குத் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chennais LPG Crisis Auto Drivers Stranded in 2km Queues Amid Fuel Shortage