வயதான பெண்கள் தான் முக்கிய டார்கெட்.. பண்டிகைகால திருட்டு கும்பல் அகப்பட்டது எப்படி?..!
Chennai Festival time thief gang arrest by police
வடசென்னையில் வயதான நபர்களை குறிவைத்து நூதன முறையில் பணம் மற்றும் நகைகள் திருட்டில் ஈடுபடும் கும்பல் சுற்றுவதாக காவல் துறையினருக்கு அடுத்தடுத்து புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், திருவெற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார், திருவெற்றியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.
இதில், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை உட்பட வடசென்னையின் 15 முக்கிய நகர்ப்புற பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதன்போது புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றித்திரிந்த 4 பெண்களை சந்தேகத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியை சார்ந்த திலகா (வயது 28), ராணி (வயது 38), மரியா (வயது 27), ராஜம்மாள் (வயது 40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் தற்போதைய பண்டிகை காலத்தினை கணக்கில் வைத்து சென்னையில் உள்ள நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைக்கு வரும் மக்களிடம் திருட்டில் ஈடுபட வந்ததும், இதற்காக சென்னையில் வீடு எடுத்து வாடகைக்கு தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பேருந்து நிலையம், வங்கி, கோவில் என பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் இருக்கும் வயதான நபர்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதும், ஷேர் ஆட்டோவில் செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
சென்னையின் திருவெற்றியூர், ஆர்.கே. நகர், எழும்பூர், பூக்கடை, வில்லிவாக்கம் போன்ற 15 க்கும் மேற்பட்ட இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியதும் அம்பலமானது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உஷா (வயது 34), லட்சுமி (வயது 40), இசக்கியம்மாள் (வயது 27) ஆகியோரையும் கைது செய்துள்ளனர். மொத்தமாக சுமார் 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.10 ஆயிரம் ரொக்கம், 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Festival time thief gang arrest by police