தனிப்பட்ட விரோதம்: டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி மீது பாய்ந்த நடவடிக்கை..!
Action against District Judge for ordering DSP to be imprisoned due to personal enmity
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை, தனிப்பட்ட விரோதம் காரணமாக சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளமை விசாரணையில் உறுதியாகியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி செம்மல் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்கும்படி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குறித்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் எஸ் பி, டி எஸ் சி மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது உறுதியாகியுள்ளது. என்றும், நீதிபதியின் முன்னாள் பி.எஸ்.ஓ. மாமனார் பேக்கரியில் நடந்த தகராறில் வழக்கு பதிய டி.எஸ்.பி.க்கு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால், பேக்கரியில் தகராறில் ஈடுபட்டவர்கள் சமரசமாக சென்றதால் வழக்குப் பதியப்படவில்லை. வழக்குப் பதியப்படாததை காரணம் காட்டி டி.எஸ்.பி.யை சிறையில் நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காஞ்சி உணவு பாதுகாப்பு அலுவலரை, பேக்கரியில் சோதனை நடத்த நீதிபதி கட்டாயப்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீதிபதி செம்மல் மீதான விசாரணை அறிக்கையை மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்க பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
English Summary
Action against District Judge for ordering DSP to be imprisoned due to personal enmity