நாமக்கல் || படமெடுத்த நாகப்பாம்பு - நொடி பொழுதில் பறிபோன ஆவின் மேலாளரின் உயிர்.!
aavin manager died in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் வெட்டுக்காட்டுபுதூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல், ஆவின் பால் நிலையத்தில் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்து தனது காரின் கதவை திறந்தார். அப்போது காரின் ஓரத்தில் நாகப்பாம்பு ஒன்றும், சாரைப்பாம்பு ஒன்றும் பின்னி பிணைந்து சரசமாடி கொண்டிருந்தது.
இதை பார்த்த தட்சிணாமூர்த்தி கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பாம்புகளை விரட்ட முயன்றுள்ளார். இதில் கோபமடைந்த நாகப்பாம்பு திடீரென படம் எடுத்தபடி தலையை தூக்கியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அங்கு கிடந்த கல்லில் அவரது தலை மோதி அடிபட்டது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதைக்கவனித்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தட்சிணாமூர்த்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
aavin manager died in namakkal