பெண் காவல் அதிகாரிக்கு, காவல் நிலையத்தில் வளைகாப்பு.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்..!!
a Lady Cop Baby shower Festival arranged by Inspector of Station in Krishnagiri
சேலம் மாவட்டத்தை சார்ந்தவர் விஜயக்குமார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியை சார்ந்தவர் மீரா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2011 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. விஜயகுமார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மீரா பர்கூரில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்து வருகின்றனர். இந்நிலையில், காவல் அதிகாரி மீரா கர்ப்பமான நிலையில், கொரோனா பரவல் காரணமாக 7 ஆவது மாதம் வளைகாப்பு செய்ய பெற்றோர்கள் திருச்சியில் இருந்து வர இயலவில்லை. பர்கூர் காவல் நிலையத்தில் கடந்த 2 வருடமாக பணியாற்றி வரும் மீரா எந்த நேரத்திலும் கலகலப்புடனும், சுறுசுறுப்புடனும் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்த நிலையில், காவல் ஆய்வாளர் கற்பகம் மீராவிடம் பிரச்சனை குறித்து வினவியுள்ளார். இதில், மீராவின் பெற்றோர்கள் வளைகாப்பு நடத்த வரவில்லை என்ற தகவலை அறிந்துள்ளனர்.
இதனையடுத்து காவல் நிலையத்திலேயே 5 வகை சாதம் மற்றும் 5 தட்டுகளில் சீர்வரிசையை கொண்டு வந்து, இனிப்பு காரம் என்று பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளனர். விஜயகுமாரின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு வந்த பின்னர், ஆய்வாளர் கற்பகத்தின் தலைமையில் வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. பிற காவல் அதிகாரிகளான மகாலட்சுமி, தனலட்சுமி, கிருஷ்ண வேணி, சுமதி, கலைராணி, நிர்மலா, நித்யா, நஷீபா, மகேஸ்வரி ஆகியோரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
a Lady Cop Baby shower Festival arranged by Inspector of Station in Krishnagiri