பாலம் கட்ட தோண்டிய குழி - இரண்டு பேரின் உயிரை பறித்த சோகம்.!
2 peoples died for accident in tirupur
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருப்பூர் பச்சாபாளையம் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு தீக்ஷனா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நாகராஜ் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர், திருநள்ளாறு உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர். அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
அதன் படி அவர்கள் தாராபுரம் குள்ளாய்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி உள்ளிட்ட இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களது மகள் தீக்ஷனா பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உதவி கேட்டு விடிய விடிய சத்தமிட்டுள்ளார். ஆனால் மூவரும் ஆழமான குழிக்குள் விழுந்து கிடந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்து குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில் அதிகாலை அந்த வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர் சிறுமியின் சத்தம் கேட்டு அவரை குழிக்குள் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் பாலம் அமைக்கும் தனியார் நிறுவனம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
2 peoples died for accident in tirupur