ஐபிஎல் ஸ்பான்சராக பதஞ்சலி நிறுவனம்? பதஞ்சலி செய்தித்தொடர்பாளர் தகவல்.!
may be patanjali as sponsor of ipl 2020
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்த 13-வது ஐபிஎல் கிரிக்கேட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த வருடம் நடைபெற வேண்டிய 20 ஓவர் உலகக்கோப்பை தள்ளிப்போக ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஏற்பாடுகள் தயாராகின.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா சீன இடையே கால்வான் பள்ளத்தாக்கில் எல்லை பிரச்னை ஏற்பட்டு இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதி கொண்டனர். இதில் இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து சீனப் பொருட்களை இந்தியாவில் தவிர்க்கும்படி கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் கூடி போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடத்த முடிவு செய்தது. இந்த கூட்டத்தின் முடிவில் ஸ்பான்சர்கள் அனைவரும் பழைய ஒப்பந்தத்தின்படியே தொடர்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. ஐபிஎல் தொடரின் முதன்மை ஸ்பான்சராக விவோ என்ற சீன நிறுவனம் உள்ளது
இந்திய-சீன எல்லையில் பிரச்னை நிலவும் நிலையில், சீன நிறுவனம் ஐபிஎல்க்கு ஸ்பான்சர் அளிப்பதா என சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதையடுத்து நடப்பாண்டு மட்டும் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்துகொள்வதாக பிசிசிஐயிடம் விவோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விவோ விட்டுச்சென்ற இடத்தை பிடிப்பதற்கு கோகோகோலா, அமேசான், அதானி குழுமம், டாடா குழுமம், ஜியோ, பைஜுஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிறுவங்களின் போட்டியில் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ்.கே. திஜார்வாலா கூறுகையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஸ்பான்சராக இருக்கலாம் என்று யோசித்துள்ளோம், அதன்மூலம் எங்கள் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலக அளவில் ஒரு சந்தை உருவாகும். தற்போது பிசிசிஐ நிர்வாகத்தை முறைப்படி அணுக உள்ளோம் என்றார்.
முதல் கட்டமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராக இருந்து வரும், ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனம் ரூபாய் 300 கோடி வரை கொடுத்து ஸ்பான்ஸர்ஷிப் பெற முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
English Summary
may be patanjali as sponsor of ipl 2020