இனிதான் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவே! கூடும் திரை பிரபலங்கள்! வண்ண மயமான கலைநிகழ்ச்சிகள்!
BCCI Plan to grant function before ind vs pak worldcup league match
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கு முன்னர் எப்போதும் தொடக்க விழா நடத்துவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த முறை அப்படியான விழா எதுவும் நடத்தப்படவில்லை.
முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதியதாலும், வார நாட்களில் நடைபெற்றதாலும் எதிரார்த்த அளவிற்கு கூட்டம் வராது, கலைநிகழ்ச்சிகளும் நடத்துவதும் பெரும் செலவு ஆகும் என்பதால், கூட்டம் வராமல், வருமானம் வராது என தொடக்க விழாவை ரத்து செய்துவிட்டனர்.
தற்போது வார இறுதி நாளாகவும், போட்டித்தொடரில் மிகவும் எதிர்பார்க்கும் போட்டியாகவும் இருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்னர் இந்த விழாவினை நடத்திட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது . இதன்மூலம் பெருமளவு லாபம் சம்பாதிக்கலாம் எனவும் திட்டமிடபட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 14-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம் என்பதால் பிசிசிஐ மிகபெரிய வருமானத்திற்கு திட்டமிட்டு வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு திரை பிரபலங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் அர்ஜித் சிங் மேடையில் நிகழ்ச்சி நடத்துவார் எனவும், அதனைத்தொடர்ந்து சில நாயகிகளின் நடனமும் இருக்கலாம் எனவும் தெரிகிறது. வண்ணமயமான வாணவேடிக்கைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகிறது.
போட்டித்தொடர் தொடங்கும் முன்னே நடத்த வேண்டிய விழாவை, வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, போட்டித்தொடரின் நடுவே விழாவை நடத்துவது, பிசிசிஐ மீது விமர்சனத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கி இருக்கிறது.
ஏற்கனவே டிக்கெட் முழுவதும் விற்பனை ஆகிவிட்டது என சொல்லும் பிசிசிஐ மைதாங்களில் கூட்டம் வராமல் போவதால், பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகளை சந்திக்கிறது. மைதானத்தில் கூட்டம் இல்லை, தர்மசாலா ஆடுகளத்தில் அவுட் பீல்ட் தரமில்லை என விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், பணத்தை மட்டுமே பிரதானமாக வைத்து நடந்து கொள்வது, விளையாட்டின் மேன்மையை குறைப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
English Summary
BCCI Plan to grant function before ind vs pak worldcup league match