காமாட்சி விளக்கை ஏன் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்?
why should lighting kamatchi amman lamp
பொதுவாக அனைவரின் வீட்டிலும் காமாட்சி விளக்கை நாம் காண முடியும். ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது? என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
உலக மக்களின் நன்மைக்காக காமாட்சி அம்மன் கடும் தவம் புரிந்தார். அப்போது சகலதெய்வங்களும் காமாட்சி அம்மனுள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை ஒருவர் வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
காமாட்சி அம்மனுக்குள் சகலதெய்வங்களும் அடக்கம் என்பதால் அவரவர் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவார்கள். இதன் மூலம் காமாட்சி அம்மனின் அருளும், குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குலதெய்வம் தெரியாதவர்கள் அன்னை காமாட்சியை நினைத்து என் குலதெய்வம் தெரியவில்லை, நீயே என் குலதெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று என வேண்டுவார்கள். இதனால் அதற்கு காமாட்சி தீபம் என பெயர் ஏற்பட்டது.
அனைத்து தெய்வங்களின் அருளை ஒன்றாக பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் மணமக்கள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக் கொண்டு வலம் வருகின்றனர். புகுந்த வீட்டில் முதன்முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம்.
அதனோடு, குலதெய்வமும் அந்த விளக்கில் இருந்து அருள்புரிவதால் முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அந்த குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
மங்களப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்களத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.
பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.
சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்கு சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.
புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியப்படி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி, முன்னால் பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் திருவிளக்கே.
English Summary
why should lighting kamatchi amman lamp