ரிஷப வாகனத்தில் அமர்ந்த மூலவர்.. இறைவி விஜயநாயகி.. அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில்.!
Today special vijayanathakeshwarar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
சென்னை மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி என்னும் ஊரில் அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் சின்னாண்டி என்னும் ஊர் உள்ளது. சின்னாண்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கருங்கல்லாலான கருவறையின் உள்ளே மூலவர் விஜயநாதகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
கோயில் நுழைவு வாயிலின் முகப்பில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுவாமியும், அம்பாளும் காட்சியளிக்க அவர்களுக்கு இருபுறமும் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர்.
இவ்வாலயத்தின் இறைவி விஜயநாயகி அம்மன் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கிய திசையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள்.
அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் உள்ள குருபகவான் விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும்.
மூலவரின் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
வேறென்ன சிறப்பு?
இத்தல அர்த்த மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையாரின் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன.
பிரகாரத்தை வலம் வருகையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்... வள்ளி, தெய்வானை சமேத முருகன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் தரிசனம் தருகிறார்கள்.
இத்தல முன் மண்டபத்தில் பலிபீடமும், நந்திகேஸ்வரரும் சிறப்பாக காட்சியளிக்கின்றனர்.
கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவை சிறப்பாக காட்சி தருகின்றன.
ஈசான்ய மூலையில் காலபைரவருக்கு தனிச்சன்னதி உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மகா சிவராத்திரி விழா, ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், காலபைரவாஷ்டமி, கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமை, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இக்கோயிலில் முக்கியமாக இருதய கோளாறு மற்றும் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special vijayanathakeshwarar temple